குறிக்கோள்

விக்கிமேற்கோள் இலிருந்து
(இலட்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலட்சியம் அல்லது குறிக்கோள் (Ambition) குறித்த மேற்கோள்கள்

  • இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை யொப்பான். - ஆவ்பரி[1]
  • மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும். -பீக்கன்ஸ்பீல்டு[1]
  • தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம். - ராபர்ட் பிரௌனிங்[1]
  • எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி- எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி. -டாக்டர் ஜான்ஸன்[1]
  • தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம். -ரிக்டர்[1]
  • மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம்.-வாவனார்கூஸ்[1]
  • ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று. -ஹோம்ஸ்[1]
  • எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்? என்னும் கேள்வியே. - ரஸ்கின்[1]
  • ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன். -ஸெனீகா[1]
  • வாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும். யங் இறுதியில் லட்சியத்தை அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும். -கதே[1]
  • மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும். -ஹாட்டன் பிரபு[1]
  • இன்பங்களைப்பெற முயல்வதிலும் இலட்சியங்களைப் பெருக்க முயல்வதே நலம். -ஆவ்பரி[1]
  • லெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும். -ஷில்லர்[1]
  • முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும். -ரஸ்கின்[1]
  • ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும்.-இப்ஸன்[1]
  • தன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாயும் எவ்வளவு அளவொத்ததாயும் அபிவிருத்தியடைய முடியுமோ அவ்வளவு அபிவிருத்தியும் அடைவதே ஒவ்வொருவனுடைய லட்சியமாயிருக்கவேண்டும். -ஹம்போல்ட்[1]
  • மனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கெளரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின் வாழப் போகிறவர் இவர்களுடைய நன்மையை நாடுவதே. -ஹாரியட் மார்ட்டினோ[1]
  • இவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று. அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே.-நியூமன்[1]
  • வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவெருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்? -ஜார்ஜ் எலியட்[1]
  • நீண்ட காலம் வாழவேண்டுமென்பது அநேகமாக ஒவ்வொருவருடைய ஆசையுமாகும். ஆனால் நன்றாய் வாழ விரும்புபவர் வெகுசிலரே. -ஹீஜிஸ்[1]
  • நாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங்கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய். -டெனிஸன்[1]
  • அடிவானத்தை நோக்கிச் செல்லும் பொழுது, அது பின்னால் நகர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். அது போல், மனிதனின் இலட்சியமும், அவன் அதை நோக்கி முன்னேறும் பொழுதுதான் பின்னால் நகர்ந்துகொண்டேயிருக்கும். ஷெட்[2]
  • உயர்ந்த நோக்கங்கள் உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன. - எம்மன்ஸ்[2]
  • பனிக்கட்டியில் சிலைகள் செய்து. அவை கரைந்து போவதைக் கண்டு நாம் கண்ணீர் பெருக்குகின்றோம். - வால்டர் ஸ்காட்[2]
  • உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கைகளே தலைசிறந்த பெருமையுள்ள வாழ்க்கைகள். - அல்மெரான்[2]
  • இலட்சியங்களே உலகின் எசமானர்கள். - ஜே. ஜி. ஹாலண்ட்[2]
  • இலட்சியவேகம் என்பது, நாம் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்தாலும் திருப்தியே ஏற்படாதளவு மனித இருதயத்தில் எழும்பும் அதிவலிமையான ஒரு வேட்கையாகும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[3]

குறிக்கோள் குறித்த பழமொழிகள்[தொகு]

  • உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி-இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது. -பழமொழி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 106-107. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குறிக்கோள்&oldid=20231" இலிருந்து மீள்விக்கப்பட்டது