ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:நூல்கள் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:நூல்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:நீதி நூல்கள் சேர்க்கப்பட்டது
 
வரிசை 347: வரிசை 347:
* [http://www.aramseyavirumbu.com அறம் செய விரும்பு]
* [http://www.aramseyavirumbu.com அறம் செய விரும்பு]


[[பகுப்பு:நூல்கள்]]
[[பகுப்பு:நீதி நூல்கள்]]

03:03, 17 ஏப்பிரல் 2016 இல் கடைசித் திருத்தம்

ஆத்திசூடி என்பது ஒரு நீதி நூல் ஆகும். இதனை ஔவையார் இயற்றியுள்ளார்.

கடவுள் வாழ்த்து[தொகு]

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

உயிர் வருக்கம்[தொகு]

1.அறம் செய விரும்பு

  • நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்

  • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

  • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

  • ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

  • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்

  • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

  • எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி

  • இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

  • யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

  • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

  • நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

  • ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்

  • அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்[தொகு]

14.கண்டொன்று சொல்லேல்.

  • கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15.ஙப் போல் வளை.

  • 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
    அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
  • "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு.

  • சனி(குளிர்ந்த) நீராடு.

17.ஞயம்பட உரை.

  • கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18.இடம்பட வீடு எடேல்.

  • உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு.

  • ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண்.

  • உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல்.

  • ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய்.

  • எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல்.

  • பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
  • நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல்.

  • நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25.அரவம் ஆட்டேல்.

  • பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்.

  • 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27.வஞ்சகம் பேசேல்.

  • கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே

28.அழகு அலாதன செய்யேல்.

  • இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்.

  • இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல்.

  • தருமத்தை எப்போதும் மறவாமல் செய்

31.அனந்தல் ஆடேல்.

  • மிகுதியாக தூங்காதே

ககர வருக்கம்[தொகு]

32.கடிவது மற

  • யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்

  • தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
  • பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்

  • உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை யகற்று

  • இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்

  • நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்

  • நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே

38. கெடுப்ப தொழி

  • பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்

  • கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்

  • உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்

  • பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி

  • குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43.கௌவை அகற்று

  • வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்[தொகு]

44. சக்கர நெறி நில்

  • தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

45.சான்றோ ரினத்திரு

  • அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்

  • பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்

  • புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

  • கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

49. சூது விரும்பேல்

  • ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்

  • செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

51.சேரிடமறிந்து சேர்

  • நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்

  • பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

53. சொற்சோர்வு படேல்

  • பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்

  • முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்[தொகு]

55. தக்கோ னெனத்திரி

  • பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு

  • யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்

  • நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

58. தீவினை யகற்று

  • பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்

  • முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்

  • ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்

61. தெய்வ மிகழேல்

  • கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்

  • உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல்சொல் கேளேல்

  • மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்

  • பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்

  • ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

நகர வருக்கம்[தொகு]

66. நன்மை கடைப்பிடி

  • நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. நாடொப் பனசெய்

  • நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்

68. நிலையிற் பிரியேல்

  • உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர்விளை யாடேல்

  • வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே

70. நுண்மை நுகரேல்

  • நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. நூல்பல கல்

  • அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72.நெற்பயிர் விளை

  • நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுகு

  • ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. நைவினை நணுகேல்

  • பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. நொய்ய வுரையேல்

  • பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்

  • மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்[தொகு]

77. பழிப்பன பகரேல்

  • பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

  • பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

  • குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்

  • பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

  • உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்

82. பூமி திருத்தியுண்

  • விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

83. பெரியாரைத் துணைக்கொள்

  • அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

84. பேதைமை யகற்று

  • அறியாமையைப் போக்கு

85. பையலோ டிணங்கேல்

  • அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்

  • பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்

  • யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

மகர வருக்கம்[தொகு]

88. மனந்தடு மாறேல்

  • எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. மாற்றானுக் கிடங்கொடேல்

  • பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

  • சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்

  • மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்

  • எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

93. மூர்க்கரோ டிணங்கேல்

  • மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. மெல்லினல்லாள் தோள்சேர்

  • பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்

  • நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்

  • விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. மொழிவ தறமொழி

  • சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

98.மோகத்தை முனி

  • நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்[தொகு]

99. வல்லமை பேசேல்

  • உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாதுமுற் கூறேல்

  • பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே

101. வித்தை விரும்பு

  • கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. வீடு பெறநில்

  • முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. உத்தமனாய் இரு

  • உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடிவாழ்

  • ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

105. வெட்டெனப் பேசேல்

  • யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே

106. வேண்டி வினைசெயேல்

  • வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. வைகறை துயிலெழு

  • நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்

  • பகைவர்களை நம்பாதே

109. ஓரஞ் சொல்லேல்

  • எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
wikisource
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:


wikisource
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆத்திசூடி&oldid=10862" இலிருந்து மீள்விக்கப்பட்டது