ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
பிரபஞ்சம் என்பது ஒரு நூலகம் (1967)

ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்கஸ் (Jorge Francisco Isidoro Luis Borges, ஆகஸ்ட் 24, 1899 – ஜூன் 14, 1986) ஒரு ஆர்ஜெண்டீன எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

கதைகள் என்பன முடிவற்ற சாத்தியங்களுக்கான துவக்கப் புள்ளி.
  • உலகின் புரிந்து கொள்ள முடியாத உண்மைக்கு எதிராக மனிதன் செய்ய முயலும் முயற்சிகள் அனைத்தும் ஒரு கதைதான்.
  • கதைகள் என்பன முடிவற்ற சாத்தியங்களுக்கான துவக்கப் புள்ளி.
  • இதுவரை உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்களில் எது மிகச்சிறந்தது என்று நினைக்கிறீர்கள் என போர்கெஸிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில்,
"வாசகன்"
  • நான் காலம் எனும் பொருளால் உருவாக்கப்பட்டவன். காலம் என்னும் ஆறு என்னை அடித்துச் செல்கிறது. ஆனால், நான்தான் அந்த ஆறு. ஒரு புலி என்னை அடித்து விழுங்குகிறது. அந்தப் புலியும் நான்தான். ஒரு நெருப்பு என்னை எரிக்கிறது. அந்த நெருப்பும் நான்தான்.
  • காலம் என்பது சப்தமற்ற என்னுடைய நிழலைப் போல என் கூடவே இருக்கிறது.
  • உலகில் உள்ள உயிரினங்களை விடவும் மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமானது. வினோத உயிரினங்களுக்கு என ஒரு மிருகக் காட்சி சாலையை அமைத்தால் அதன் பரப்பு நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாய் இருக்கும்.
  • நான் மதவாதியோ, சிந்தனாவாதியோ, நீதிபோதகரோ அல்ல. என்னிடம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல என்று தனியாக எதுவும் இல்லை.
  • வாழ்நாள் முழுதும் ஒரே புத்தகத்தை மாற்றி, மாற்றி எழுதுவதுதான் நடந்தது.
  • பார்வையற்றவனுக்கு உலகம் இருண்டுவிடுவது இல்லை. அதற்குப் பதிலாக அவனால் நிறங்களைப் பாகுபாடு செய்ய மட்டுமே முடிவதில்லை.
  • ஞாபகங்களே கதையின் மூலப்பொருள்.
  • "நான் மிகவும் தனியாக இருக்கிறேன்" மரணமடையும் தருவாயில் கூறியது.
  • ஒரு மனிதன் இதர மனிதர்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். சில நிமிடங்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். ஆனால் தேசத்திற்கோ, மின்மினிப் பூச்சிகளுக்கோ, தோட்டங்களுக்கோ, நதிச்சுழல்களுக்கோ, சூரிய அஸ்தமனங்களுக்கோ அவன் எதிரியாக இருக்க முடியாது.
  • "இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது." தன்னுடைய கடைசி கதையில் எழுதியது.

புத்தகங்கள் பற்றி[தொகு]

  • பிரபஞ்சம் என்பது ஒரு நூலகம்.
  • புத்தகங்கள் தனித்த பிரபஞ்சம்.
  • முடிவற்ற புத்தகம் ஒன்றின் வாசகனாக, எழுத்தாளனாக, ஏன் ஒரு கதாபாத்திரமாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  • சொர்க்கம் என்பது நூலகமாகத்தான் இருக்கும்.

கவிதைகள் பற்றி[தொகு]

  • உலகின் ஆதி சங்கேதமே கவிதைதான்.
  • கவிதை ஒரு சமூகத்தின் ரகசிய செயல்பாடு.
  • கவிதையின் வழியாக வெளிப்படும் உருவகங்கள் அந்தக் கலாச்சாரத்தின் ரகசிய அடையாளங்கள்.
  • மயிலிறகுதான் கவிதையின் ஸ்தூல வடிவம்.

புலிகள் பற்றி[தொகு]

  • ஒரு புலி என்னை அடித்து விழுங்குகிறது. அந்தப் புலி நான்தான்.
  • மனதின் புதருக்குள் ஒரு புலி எப்போதும் சுருண்டு படுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
  • குழந்தை ஒரு போதும் புலியைப் பார்த்துத் தானே பயப்படுவதில்லை. ஒருவேளை குழந்தை தானும் ஒரு புலிதான் என்று நினைத்திருக்கக்கூடும்.
  • புலியின் உடலில் உள்ள மஞ்சளும் கருப்புமான நிறவரிசை நாம் வாசித்து அர்த்தம் காணமுடியாத அதிசயம்.

பிற இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்&oldid=37412" இலிருந்து மீள்விக்கப்பட்டது