சொற்பொழிவு

விக்கிமேற்கோள் இலிருந்து

சொற்பொழிவு (Public speaking) என்பது பொது இடத்தில் பலர் முன்னிலையில் ஒரு விசயம் குறித்து விளக்கமாக உரையாற்றுவது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன். இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில், “ம. பொ. சி. இறுதி உரையாற்றினர்“ என்று போட்டிருந்தார்கள். இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.- ம. பொ. சிவஞானம்[1]
  • எனக்கு ஒரு தலைப்புத் தந்தால், அதை நான் இரவும், பகலும் ஆழ்ந்து படித்து விடுவேன். என் உள்ளமெல்லாம் அதுவே நிறைந்திருக்கும். பிறகு என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து அனைவரும் ‘அறிவுப்பழம்’ என்று பாராட்டுவார்கள் ஆனால் அது அறிவின் பழமல்ல, உழைப்பிற்கும் சிந்தனைக்கும் விளைந்த கனியாகும்,
    • எமில்டன் (புகழ்பெற்ற பேச்சாளர்)[2]
  • மற்றவர்களைத் தூண்டும்படியான பொலிவுடன் ஒரு பேச்சாளன் இருக்க வேண்டும் என்பது பேச்சுக்கலையின் முதல் விதி. அதைச் செய்யவல்லது அவனுடைய வாழ்க்கையே. - ஸிஸரோ[3]
  • நடக்க முடியாதவர்கள் குதிரைகள்மீது ஏறிச் செல்வது போல, சொற்பொழிவாளர்கள் தங்கள் விஷயம் மிகவும் பலவீனமாயிருந்தால், அப்பொழுதுதான் மிகவும் காரசாரமாய்ப் பேசுவார்கள். - ஸிஸரோ[3]
  • சுருக்கமாகப் பேசுவதில் ஒவ்வொரு மனிதனும் பயிற்சி பெறவேண்டும். நீண்ட பேச்சுகள் பேசியவனுக்குத் திருப்தியளிக்கலாம்; ஆனால், கேட்பவர்களுக்குச் சித்திரவதை ஆகும். - ஃபெல்ட்ஹாம் [3]
  • பற்பல பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் ஆழமில்லை என்பதற்குப் பதிலாக, நீளத்தைக் கூட்டிவிடுகிறார்கள். - மாண்டெஸ்கியு[3]
  • உண்மையான பேச்சுத் திறனுக்கு ஈடான ஆற்றலில்லை. ஸீஸர் மக்களின் அச்சங்களைக் கிளறிவிட்டு அவர்களை அடக்கி ஆண்டு வந்தார். ஸிஸரோ அவர்களுடைய அன்பைக் கவர்ச்சி செய்து உணர்ச்சிகளை ஆண்டு வந்தார். ஸீஸரின் செல்வாக்கு அவர் ஆயுளுடன் முடிந்தது. மற்றவருடைய செல்வாக்கு இன்றுவரை தொடர்ந்து நிற்கின்றது. - ஹென்றி கிளே[3]
  • விஷயங்களை மதிப்பிட்டுப் பேச முடியாத பேச்சாளன், கடிவாளமில்லாத குதிரை. - தியோஃபிரேஸ்டஸ்[3]
  • ஸிஸரோவின் மென்மையான, நாகரிகச் சொற்பொழிவுகளைக் கேட்ட ரோமானியர்கள், 'நமது சொற்பொழிவாளர் எவ்வளவு அருமையாகப் பேசினார்' என்று ஒருவருக்கொருவர் வியந்துகொண்டே சென்றனர். ஆனால், அத்தீனியர்கள் டெமாஸ்தனிஸின் பேச்சுகளைக் கேட்டு, உள்ளங்களில் அந்தச் சொற்பொழிவுகளின் விஷயத்தைப்பற்றியே எண்ணிக்கொண்டு அவரை மறந்துவிட்டு, அவர் பேச்சுகளை முடிக்கு முன்பே, “நாம் ஃபிலிப்புடன் போராடச் செல்வோம்! என்று கூவிக்கொண்டே செல்வார்கள். - கோல்டன்[3]
  • பேச்சாளரோ, ஆசிரியரோ, தம் கருத்துகளைவிடத் தம் சொற்கள் சிறியவைகளாக இருக்கும்படி செய்யக் கற்றுக்கொள்ளும்வரை வெற்றி பெற இயலாது. - எமர்ஸன்[3]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 199-200. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சொற்பொழிவு&oldid=21598" இலிருந்து மீள்விக்கப்பட்டது