அறிவின்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

அறிவீனம் அல்லது அறிவின்மை குறித்த மேற்கோள்கள்

  • மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான். - ஷேக்ஸ்பியர்[1]
  • அறியாமை இறைவனின் சாபத்தீடு, அறிவுடைமை நாம் வானத்திற்குப் பறந்து செல்ல உதவும் சிறகு. - ஷேக்ஸ்பியர்[2]
  • தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர். -போப்[1]
  • முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றிவிட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம். -ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்[1]
  • ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார்.- சிஸரோ[1]
  • உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர். -தாந்தே[1]
  • மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான். அறிவு முற்றியவன் தன்னையும் குறைகூறான், பிறரையும் குறை கூறான். -ஹெர்டர்[1]
  • தங்கள் அபிப்பிராயத்தை ஒரு பொழுதும் மாற்றிக்கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே. -லவல்[1]
  • போக்கிரி என்பவன் தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் முட்டாள். -கோல்ரிட்ஜ்[1]
  • தவறு-அதில் எவ்வளவு உண்மையுளதோ அவ்வளவு அது அபாயகரமானதாகும். -அமீல்[1]
  • தன் திருப்தியை நாடாது, உலகத்தின் மதிப்பை நாடி, தன் விருப்பத்திற்கு மாறாகப் பொருளும் புகழும் தேடச் சிரமம் எடுத்துக்கொள்பவன் என் அபிப்பிராயத்தில் முழு மூடன் ஆவான். -கதே[1]
  • மாந்தர் மூடராக வாழலாம், ஆனால் மூடராக இறக்க முடியாது. -யங்[1]
  • கல்லாமையைவிடப் பிறவாமலிருத்தல் மேலாகும். ஏனெனில், அறிவின்மைதான் எல்லாத் துயரங்களுக்கும் வேர். - பிளேட்டோ[2]
  • அறியாதாரிடம் அனுதாபம் கொள்வது தலைசிறந்த பண்பாட்டிற்கு அறிகுறி. - எமர்ஸன்[2]
  • தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரமாகும். - ஆல்காட்[2]
  • அறியாமையால் ஆணவம் வளரும் ஆகக் குறைவான அறிவுடையவரே அதிகம் தெரிந்ததாகப் பாவனை செய்வர்.- கே[2]
  • அறிவிலி கழுகுச் சிறகுகளையும், ஆந்தைக் கண்களையும் பெற்றிருக்கிறான். - ஜியார்ஜ் ஹெர்பர்ட்[2]
  • கல்வியில் செருக்கடைதல் முதன்மையான அறியாமை. - ஜெரிமி டெய்லப்[2]
  • அறிவிலி மெளனமாயிருப்பதைப் போல் அவனுக்கு நன்மை வேறில்லை; இதை அவன் உணர்வதனால் அவன் அறிவிலியாயிருக்க மாட்டான். - ஸாஅதி[2]
  • அறிவிலியாயிருப்பதைவிடப் பிச்சைக்காரனாயிருப்பது மேல், பிச்சைக்காரனுக்குப் பணம் ஒன்றுதான் தேவை. ஆனால், அறிவிலிககு மானிடப் பண்பே தேவை. - அரிஸ்டிப்பஸ்[2]
  • அறிவின்மை உள்ளத்தின் இரவு. ஆனால், அந்த இரவில் மதியுமில்லை. தாரகையுமில்லை. - கன்ஃபூஷியஸ்[2]
  • அறிவிலிகளின் நடுவிலுள்ள அறிவாளி, குருட்டு மனிதர்கள் நடுவிலுள்ள ஓர் அழகிய பெண்ணுக்கு ஒப்பிடப்பெற்றிருக்கிறான். - ஸாஅதி[2]
  • குழந்தைப்பருவம் அதிகக் காலம் நீண்டுவிடுவதுதான் அறியாமை. ஆனால், அதில் குழந்தைப்பருவத்தின் கவர்ச்சிதான் இருப்பதில்லை. - போஃபெர்ன்[2]
  • அறியாமையே பேரின்பமாயிருந்தால் அறிவுடன் இருப்பது தவறு - கிரே[2]
  • 'புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர் அவர்கள்; பாவ கருமங்களைச் செய்துகொண்டு திரிகின்றனர்; அவை கசப்பான துன்பக்கனிகளையே அளிக்கின்றன. - புத்தர்[2]
  • அறிவிலார் என் உடையரேனும் இலர். - திருவள்ளுவர்[2]
  • அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. - திருவள்ளுவர்[2]
  • அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
    செறிபழியை அஞ்சார் சிறிதும். - நன்னெறி[2]
  • அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை. - வெற்றிவேற்கை[2]

பழமொழிகள்[தொகு]

  • பிறர் நம்மை அறிந்துகொள்ள முடியாதபடி நடந்து கொள்வது நம் வழக்கம். அதன் முடிவு யாதெனில் நாமே நம்மை அறிந்து கொள்ள முடியாதபடி நடக்கப் பயின்று விடுகிறோம் என்பதே. - பிரெஞ்சுப் பழமொழி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 65-66. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறிவின்மை&oldid=19599" இலிருந்து மீள்விக்கப்பட்டது